நேசிக்கிறேன்
← திரும்பு
articles

ஜேம்ஸ் யங் சிம்சன் (7 June 1811 – 6 May 1870)

Jenophene Abraham
ஜேம்ஸ் யங் சிம்சன் Sir James Young Simpson (1811-1870)

அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. சங்கீதம் 105:3

மயக்க மருந்தான குளோரோபார்ம் கண்டுபிடிப்பு, மருத்துவத் துறைக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். அந்த மருந்தைக் கண்டுபிடித்தவரைத் தெரியுமா? ஜேம்ஸ் யங் சிம்சன் (James Young Simpson). இவர் 1811-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஸ்காட்லாண்டைச் சேர்ந்த ஒரு பேக்கரிக் கடைக்காரருக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். தன் 21-வது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றார். மருத்துவம் படிக்கும்போதே, 'அலர்ஜியால் ஏற்படும் இறப்பு’ (Death on inflammation) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்த இவரின் திறமையைக் கண்டு, நோய்க் குறியியல் பேராசிரியர் ஜான் தாம்சன், சிம்சனைத் தனது உதவியாளராக நியமித்துக்கொண்டார். 1830-களில் மகப்பேறு மருத்துவம் பற்றி தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்திய சிம்சனுக்கு, 1840-ம் ஆண்டு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் பதவி கிடைத்தது.

தேவ பக்தியுடையவரான ஜேம்ஸ் சிம்சன், ஒருமுறை வேதத்தில் ஆதியாகமம் என்னும் பகுதியில் முதல் மனிதன் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் என்ற பெண் உருவாக்கப்பட்ட சம்பவத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அதில் ‘தேவன் ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரப்பண்ணினார். அவன் உறக்கத்திலிருந்த போது, அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினால் அடைத்தார். உருவப்பட்ட அந்த விலா எலும்பைக் கொண்டு ஒரு பெண்ணை உருவாக்கினார்’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த பகுதியை வாசித்தபோதுதான் குளோரோபார்மை கண்டுபிடிப்பதற்கான விதை ஜேம்ஸ் சிம்சனின் உள்ளத்தில் விழுந்தது. உடலில் சிறு காயம் ஏற்பட்டால் வேதனை உண்டாவது இயற்கை. ஆனால் ஆதாமோ, தன் உடலில் விலா எலும்பை எடுக்கும்போதுகூட எந்த வலியோ, வேதனையோ இல்லாமல், தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார். இப்படி ஜேம்ஸ் சிம்சனின் எண்ணங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த இந்த சிந்தனையானது செயல் வடிவம் பெற்று, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் குளோரோபார்மாக வெளிவந்தது.

இதன் பின்னர் ஒருமுறை ஜேம்ஸ் சிம்சன் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மாணவர், ‘‘உங்கள் கண்டுபிடிப்புகளிலே நீங்கள் மிகவும் பிரதானமாகக் கருதும் கண்டுபிடிப்பு எது?’’ என்று கேட்டார். எல்லா மாணவர்களும் குளோரோபார்மைத்தான் சொல்லுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ, ‘‘என் கண்டுபிடிப்புகளிலே பிரதானமானது, ‘இயேசு கிறிஸ்து என் இரட்சகர்’ என்பதுதான்’’ என்றார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டி மகிழ்ந்தார்.

இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கின்ற கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே, கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் சாதனையாளராகவே பார்க்கின்றார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டக் கூடிய நல்ல உள்ளத்தையே கர்த்தர் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார். கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் இவ்வாறு உரைக்கின்றார், மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் (எரேமியா 9:24). நாமும் கர்த்தருடைய நாமத்தை மேன்மைப்படுத்தி அவருக்கு பிரியமாக வாழ்ந்திடுவோம்.

J

எழுதியவர்

Jenophene Abraham

கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.